துஆவின் போது அல்லாஹ்விடம் கேட்கும் தேவைகளை திரும்பத் திரும்ப கேட்க வேண்டும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பத்ருப் போரில் நபியவர்களின் துஆவைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக...!” என நபியவர்கள் கூறிய பின் அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரழி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு,பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 1763).
அவ்வாறே அபூஹுரைரா (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக! இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக” என்று தவ்ஸ் குலத்தாருக்கு (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். (புஹாரி 2937, முஸ்லிம் 2524).